31 பேர் பலி: இலங்கை சிறையில் கலவரம் வெடித்தது எப்படி? பின்னணியும் நெகிழ வைக்கும் சோகக் கதையும்

இலங்கை, நீர்கொழும்பு சிறை கலவரம்,
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், - ராஜகோபால் யசிஹரன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடியதாக இருக்கலாம்.)

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 31 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான சிறை வன்முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த வன்முறை, மரணத்தை விளைவிக்கக்கூடிய பலப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது மற்றும் பிற சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தது, சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம், போதிய உளவுத்தகவல்கள் இல்லாமை மற்றும் பலவீனமான சிறை நிர்வாகம் ஆகியவை மீண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்றதொரு கொடூரமான சம்பவத்தைத் தடுக்க, வெறும் புதிய விசாரணைகளையோ அல்லது புதிய சிறைச்சாலைகளை அமைப்பதையோ விட, முறையான மற்றும் உண்மையான சிறைச்சாலை சீர்திருத்தமே அவசியம் என மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்துகின்றன.

கண்ணீரில் மூழ்கிய குடும்பங்கள்

இலங்கை, நீர்கொழும்பு சிறை கலவரம்,
படக்குறிப்பு, கோப்புப் படம்

கொழும்பு வெலிக்கடை சிறையில் கடமையிலிருந்த 27 வயதான இளம் சிறை அதிகாரி மதுசர ரணவீரவுக்கு, ஜூலை 5ஆம் திகதி பிற்பகல் வந்த அழைப்பு அவரது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் என அவர் நினைத்திருக்கவில்லை.

நீர்கொழும்பு சிறையில் கைதிகளிடையே வன்முறை வெடித்ததாக செய்தி கிடைத்ததும், நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கிருந்து புறப்பட்ட குழுவில் மதுசரவும் இடம்பெற்றிருந்தார்.

அன்று பிற்பகல் தனது தாயாரைத் தொடர்புகொண்ட மதுசர, தான் அவசரமாக நீர்கொழும்புக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.

"மகனே, பத்திரமாகச் சென்று வா. ஆபத்து எனத் தெரிந்தால் ஒரு அடி பின்வாங்கு" எனக்கூறி வழியனுப்பிய தாயாருக்கு, அதன் பின்னர் மகனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

மறுநாள் காலையில் தொலைக்காட்சியில் சிறைக் கலவரச் செய்தியைக் கண்டு பதறிய தாய், மகனைத் தொடர்பு கொள்ள 100 முறைக்கும் மேல் முயன்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இறுதியில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 21ஆம் இலக்க வார்டில் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை அவர் நேரில் கண்டார்.

தாயின் குரலைக் கேட்டு ஒருமுறை கூட கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மதுசர ரணவீர உயிரிழந்தார்.

"என் தங்கமான மகன் இன்று உயிருடன் இல்லை. நான் கண் மூடுவதற்கு முன்னரே என்னை விட்டுப் போய்விட்டான். மீண்டும் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க நீ வந்துவிடு என் மகனே" என அந்த தாய் பிபிசி தமிழிடம் வேதனையுடன் தெரிவித்தார்.

இலங்கை, நீர்கொழும்பு சிறை கலவரம்,
படக்குறிப்பு, கோப்புப் படம்

தந்தை வருகைக்காக காத்திருக்கும் ஏழு மாதமே ஆன பெண் குழந்தை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதேபோன்று, இலங்கை சிறைச்சாலைகள் அவசரகால நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையின் (SPEAT Force) உறுப்பினரான 27 வயதான தர்ஷன தரங்கவும் இந்த வன்முறையில் பலியானார்.

நீர்கொழும்பு சிறை வளாகத்திற்கு அவர் அனுப்பப்பட்டது அதுவே முதல் முறையாகும். அந்தப் பெரிய சிறையின் நிலப்பரப்பு மற்றும் வழிகளை அவர் சரியாக அறிந்திருக்காததால், திடீரென வன்முறை வெடித்தபோது எங்கு செல்வது என்று தெரியாமல் தாக்குதலில் சிக்கியுள்ளார்.

அவரது வீட்டில், ஏழு மாதமே ஆன பெண் குழந்தை, இனி ஒருபோதும் திரும்பி வராத தனது தந்தையின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, சிறைக்குள் உயிரிழந்த கைதி ஒருவரின் தாயார் (பாதுகாப்பு கருதி பெயர் வெளிப்படுத்தப்படவில்லை) பிபிசி தமிழுக்குத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"உலகத்தின் பார்வையில் என் மகன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் எங்கள் சொந்த ரத்தம். எங்கள் பிள்ளைகள் சிறையில் இருந்து பிணமாக வெளியே வருவதற்காக அடைக்கப்படவில்லை. எனது மகனுக்கு வலது கையே இல்லை... தயவுசெய்து அவனை என்னிடம் உயிருடன் திருப்பித் தாருங்கள்" என கண்ணீருடன் கூறினார்.

இந்த மோதலில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 73 வயதான இந்தியப் பிரஜையான உன்னிகிருஷ்ணன் சுப்பிரமணியமும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

வன்முறை வெடித்தது எப்படி?

கலவரம் வெடிப்பதற்கான முன்கூட்டிய உளவுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், ஜூலை 5 ஆம் திகதிக்கு முன்னரே சிறைக்குள் பதற்றம் நிலவியதாகவும், இது ஒரு திட்டமிட்ட நகர்வாக இருக்கலாம் என்றும் சிறைக் கைதிகள் சிலர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினர்.

ஜூலை 5: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டதால் சிறைக்குள் அதீத பதற்றம் நிலவியது.

ஜூலை 6: காலை உணவு விநியோகத்தின் போது மீண்டும் வன்முறை வெடித்தது. எதிரெதிர் குழுக்களைப் பிரிக்க முயன்ற சிறை அதிகாரிகள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிகாரிகளை பிரதான நுழைவாயில் வரை கைதிகள் துரத்தினர். இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்தவும், நுழைவாயிலைப் பாதுகாக்கவும் 'குறைந்தபட்ச பலப்பிரயோகம்' மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், வன்முறை உச்சமடைந்தபோது, பெண் கைதிகள் உட்பட பலர் சிறைக்கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல கைதிகள் காயமடைந்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் என்ன கூறுகின்றன ?

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேராவின் உத்தரவின் பேரில், ஐந்து சட்ட மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவினர் முதற்கட்டமாக 24 பேரின் உடல்களுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தினர்.

அந்த அறிக்கையில் வெளிவந்துள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

  • துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்: 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
  • கொடூரமான தாக்குதல்கள்:- 8 சிறை அதிகாரிகள் உட்பட 9 பேர் தலையில் பலத்த காயங்கள் மற்றும் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
  • திறந்த தீர்ப்பு :- ஒரு கைதியின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாமல், ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த சிறை அதிகாரிகளின் தலையில் கடுமையான காயங்கள் காணப்பட்டமை, தாக்குதலின் கொடூரத்தையும் ஆக்ரோஷத்தையும் உணர்த்துவதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள்

வன்முறை எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து ஒருபுறம் விசாரணைகள் இடம்பெற்றாலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீதான சித்ரவதைக் குற்றச்சாட்டுகள் சிறைத்துறை அதிகாரிகள் மீதே கேள்விகளை எழுப்பியுள்ளன.

நீர்கொழும்பு சிறையிலிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 1,200 கைதிகள் வெலிக்கடை, பூசா, தும்பர, அங்குனுகொலபெலஸ்ஸ, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகள் கொடூரமான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக்கான குழு ( சி.பி.ஆர்.பி ) குற்றம் சாட்டியுள்ளது.

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள், சிறை அதிகாரிகளால் தினமும் மூன்று வேளை (காலை, மதியம், இரவு) திட்டமிட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படுவதாகவும், இதில் ஒரு கைதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் சி.பி.ஆர்.பி கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 7ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்குத் தமது பிரதிநிதிகளுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1996ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்புச் சூழலைக் காரணங்காட்டி அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் தமக்குத் திருப்தியில்லை எனக் கூறியுள்ளது.

அத்துடன், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து அவசர மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பாண்ட், சித்ரவதைகள் மற்றும் காவலில் ஏற்படும் மரணங்கள் பற்றிய செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என்றும், குடும்பத்தினருக்கும் சட்டத்தரணிகளுக்கும் கைதிகளைச் சந்திக்க தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறை அதிகாரியின் உணர்ச்சிவசப்பட்ட கதறலும் அரசாங்கத்தின் விளக்கமும்

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 8 சிறை அதிகாரிகள்.
படக்குறிப்பு, முதன்மை சிறை அதிகாரி எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச, சாஜன்ட்களான ஆர்.பி.ஆர். சஞ்சீவ, பி.என்.என். தரங்க, டி.என்.ஆர். திலகசிறி, டி.டபிள்யூ. புஷ்பகுமார, எஸ்.டி.எஸ். அபேவர்தன, ஏ.டி. தரங்க மற்றும் சிறைக்காவலர் எம்.ஜி. உபாலி ஆகியோர் நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிர் இழந்தனர்.

இந்த கலவரத்தின் பின்னர் வெலிக்கடை சிறையில் அஞ்சலி செலுத்த வந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம், அங்கு கடமையிலிருந்த சிறை அதிகாரி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

"சரியான உத்தரவுகள் சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்" என்று கூறிய அந்த அதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும், அவர்களைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவதாகவும் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், நீர்கொழும்பு வன்முறையைக் கடந்தகால சிறைக் கலவரங்களுடன் ஒப்பிட முடியாது எனக் கூறினார். கைதிகள் நேரடியாக அதிகாரிகளையே இலக்கு வைத்துத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இத்துயரத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தப்படாவிட்டால் பாரிய சிறையுடைப்பு ஏற்பட்டு பொதுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக தெரிவித்தார்.

இலங்கை, நீர்கொழும்பு சிறை கலவரம்,
படக்குறிப்பு, கோப்புப் படம்

இடநெருக்கடி மற்றும் வீட்டுக்காவல் திட்டம்

"இலங்கையின் சிறைகளில் உத்தியோகபூர்வமாக 11,000 முதல் 12,000 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் என்ற போதிலும், தற்போது 39,886 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதமானோர் (சுமார் 28,000 பேர்) விளக்கமறியல் கைதிகளாவர்" என்ற உத்தியோகபூர்வ தகவலை இலங்கை சிறைச்சாலைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இட நெரிசலைக் குறைப்பதற்காக, சிறிய குற்றச்சாட்டுகள் மற்றும் வன்முறையற்ற குற்றங்களில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இலத்திரனியல் காப்புக்கூடு (Electronic Tracking Tags) மூலம் கண்காணித்து வீட்டுக்காவலில் வைப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

பழைய போகம்பரை சிறையைப் பயன்படுத்துவதற்கும், மாஹமோதரவில் புதிய சிறையை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் இன்றி வெறும் கட்டடங்களை உயர்த்துவது தீர்வாகாது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் இருவரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை இச்சம்பவம் நினைவூட்டுவதாகக் கூறியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு