You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜனநாயகன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்திருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலை 23-ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை, கேரளா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் கருத்தை பிபிசி தமிழ் கேட்டது.
விஜய் அரசியலில் என்ன செய்யப்போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க படத்தை பயன்படுத்தியுள்ளார் என்றார் ரசிகர் ஒருவர்.
நாட்டில் என்ன நடக்கிறது, சமூக பிரச்னைகளில் அரசியல்வாதிகளின் பங்கு என்ன என்பதை படத்தில் தெரிவித்திருப்பதாக ரசிகை ஒருவர் கூறினார்.
தமிழ்நாட்டில் சாதி மதங்களை தாண்டி ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். என்றார் ரசிகர் ஒருவர்.
திரைப்படம் பார்த்த பிறகு இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் பேசுகையில், ''படம் நன்றாக இருந்தது, நாங்க தளபதியை மிஸ் பண்றோம், இனி இதுபோன்ற முதல் நாள் முதல் காட்சி வர முடியாது என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது'' என்றார்.
''விஜய் படம் தொடர்ந்து பார்ப்பதால் எனக்கு தமிழ் சரளமாக பேச முடிந்தது, படம் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது, அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்று குறிப்பிட்டார் ஓர் இலங்கை ரசிகை.
கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கேரளாவில் ஜனநாயகன் படம் பார்த்த பிறகு அவர்களில் ஒருவர் பேசுகையில், ''விஜய் படம் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்பதற்காக கேரளா வந்திருக்கிறோம்'' என்றார்.
பொள்ளாச்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் பேசுகையில், ''பொள்ளாச்சியில் முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைக்காததால் கேரளாவுக்கு வந்து படம் பார்த்தோம். படம் நன்றாக இருந்தது. ஆனால் வருத்தம் என்னவென்றால் இதுதான் விஜயின் கடைசி படம் என்பதை நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.
சென்னையை சேர்ந்த ரசிகை ஒருவர் படம் பார்த்த பிறகு பேசுகையில், ''செம மாஸான படம் . ஆனால் இனி தளபதியை திரையில் பார்க்க முடியாது என்று எண்ணி படத்தை பார்க்கும்போது அழுதுகொண்டே பார்த்தேன். எதிர்காலத்தில் ஒரு பாடலுக்காவது விஜய் வந்தால் நல்லா இருக்கும். மேலும் விஜய்யை ரசிகர்களுக்காக எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டியிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
ரசிகர் ஒருவர் பேசுகையில், "தேர்தலுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம், படம் முழுக்க அரசியல்தான் பேசப்படுகிறது. படம் முழுக்க கருத்து அதிகம் உள்ளது. பெண்கள், ஆண்களுக்கு என்ன தேவை என்பதை அரசியல் மையமாக வைத்து படத்தில் பேசியிருக்கிறார் விஜய். அவரது ரசிகர்களுக்காக கொடுக்கப்பட்ட ஆக்ஷன் படம்." என்று தெரிவித்தார்.
''படம் ரொம்ப நல்லா இருக்கு, அழுகைகளை கட்டுப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன். விஜய் அடுத்த படத்தில் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் பெண் ரசிகை ஒருவர்.
''எதிர்பார்த்த அளவுக்கு படத்தில் அரசியல் இல்லை, ரசிக்கும்படியான படமாக மாஸாக இருந்தது" என்று சென்னை ரசிகர் தெரிவித்தார்.
ரசிகை ஒருவர் பேசுகையில், "படம் நல்லா இருக்கு ஆனால் சண்டைக்காட்சிகள் அதிகம், அதுதான் தளபதி படம். அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும். கடைசி படம் என்று நான் சொல்லமாட்டேன். தினமும் தொலைக்காட்சியில் அவரை நாம் பார்க்கபோகிறோம். பெரிய திரைக்கு பதில் சின்ன திரையில் பார்க்கப்போகிறோம் அவ்வளவுதான் வித்தியாசம்" என்றார்.
படம் பார்த்த ஒரு தம்பதி பேசுகையில் , ''பெண்கள் கூட்டம் திரையரங்கில் அதிகம். எங்கள் குழந்தைகள் தான் விஜயின் தீவிர ரசிகர்கள். ஆனால் சென்சார் காரணமாக அவர்களை அழைத்து வர முடியவில்லை'' என்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு