You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு பதவி விலகியுள்ளார். இது புதிய இளைஞர் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் போராட்டம், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தற்போது கல்வி அமைச்சகத்தின் பொறுப்பு, ஏற்கனவே இரண்டு அமைச்சகங்களை கவனித்து வரும் பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே கூறுகையில் "தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீங்கள் அஞ்சாமல், இந்த அரசுக்கு முன் தலைகுனியாமல் இருந்தால் யாரையும் பதவி விலகச் செய்ய முடியும் என்பதற்கான சான்று இதுதான். ஜனநாயகத்தில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை," என்றார்.
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா வெளிநாட்டு ஊடகங்களிலும் முக்கியத்துவத்துடன் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே சில மேற்கத்திய ஊடகங்கள் இதை "ஜென் ஸி போராட்டம்" என்று வர்ணித்து வந்தன.
சிஜேபியின் போராட்டம் வளைகுடா நாடுகளின் ஊடகங்களிலும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச செய்தித்தாள்களிலும் முக்கிய இடம் பெற்றது. சில மேற்கத்திய ஊடகங்கள், கல்வி அமைச்சரின் ராஜிநாமாவை "இளைஞர் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய வெற்றி" என்று வர்ணித்தன.
பாகிஸ்தானின் டான் நாளிதழ் தனது செய்திக்கு, "கரப்பான் பூச்சிகள் வென்றன: இளைஞர்களின் பலநாள் போராட்டத்துக்குப் பிறகு இந்திய கல்வி அமைச்சர் பதவி விலகினார்" என்ற தலைப்பிட்டது.
மேலும், ஜந்தர் மந்தரில் நிலவிய கொண்டாட்ட சூழலைக் காட்டும் புகைப்படத் தொகுப்பையும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
'இளைஞர் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய வெற்றி'
அமெரிக்க ஊடக நிறுவனமான சிஎன்என், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை, இளைஞர் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய வெற்றியாக வர்ணித்துள்ளது.
சிஎன்என் தனது செய்தியில், "தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா, அரசுக்கு ஏற்பட்ட அரிதான அரசியல் பின்னடைவாகும். மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள நரேந்திர மோதி, போராட்டங்களின் அழுத்தத்தால் முடிவுகளை மாற்றுபவர் என்ற பெயரை பொதுவாகக் கொண்டவர் அல்ல. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், எதிர்ப்புக் குரல்களையும் மாற்றுக் கருத்துகளையும் அவரது அரசு அடக்குவதாக விமர்சகர்கள் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், "பல வாரங்களாக போராட்டக்காரர்கள் டெல்லியின் மையப்பகுதியில் முகாமிட்டு, இந்தியாவின் மிகவும் போட்டி நிறைந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி வந்தனர்.'' என கூறியுள்ளது
''2024-ஆம் ஆண்டு நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும், அவரது கட்சியின் பெரும்பான்மை குறைந்தது. இதனால் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை அரசு நம்ப வேண்டிய நிலை உருவானது" என்றும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் 24 ஊடகம், 2024-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தும் மோதி அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக சிஜேபி இயக்கத்தை விவரித்துள்ளது.
"பல தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இளைஞர்கள் முன்னெடுத்த பெரிய அளவிலான போராட்டங்கள், தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. அதன் பின்னணியில்தான் அவர் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்" என்று பிரான்ஸ் 24 ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த ஊடகம் மேலும், "இந்த இயக்கம் தேர்வு முறைகேடுகள் என்ற ஒரு பிரச்னையை மட்டும் மையமாகக் கொண்டதாக இல்லை. வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களுக்கான வாய்ப்புகளின் பற்றாக்குறை மற்றும் பிரதமர் நரேந்திர மோதி அரசின் அதிகரித்து வரும் மையப்படுத்தப்பட்ட, அதிகாரமயமான ஆட்சி முறை குறித்த கேள்விகளும் இதில் இடம்பிடித்தன" என்று எழுதியுள்ளது.
"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மாணவர்களிடமும் இந்தியாவின் எதிர்கால தலைமுறையிடமும் பிரதமர் மோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்" எனவும் பிரான்ஸ் 24 குறிப்பிட்டுள்ளது.
"2024ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மோதி அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இந்தப் போராட்டங்கள் மாறியுள்ளன" என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழும், கல்வி அமைச்சரின் ராஜிநாமாவை இளைஞர் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய வெற்றியாகக் குறிப்பிட்டுள்ளது.
"சமீப ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமான இது, முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியதோடு, பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரான மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளன. இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன" என்று அந்த ஊடகம் எழுதியுள்ளது.
மேலும், "கசிந்த தேர்வு வினாத்தாள்கள் குறித்து எழுந்த கடும் அதிருப்தி, வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் அரசின் கொள்கைகள் குறித்த ஏற்கனவே நிலவி வந்த அதிருப்தியுடன் இணைந்து, பெரும் அழுத்தத்தை உருவாக்கியது. அதன் விளைவாகவே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
"மோதி அரசில் அமைச்சர்கள் ராஜிநாமா செய்வது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்ச்சை காரணமாக பதவி விலகிய இரண்டாவது அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவார். இதற்கு முன்பு, 2018 அக்டோபரில், இந்தியாவின் மீ டூ இயக்கத்தின் போது பல பெண்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜிநாமா செய்திருந்தார்" என்றும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஊடகங்களில் என்ன வெளியானது?
கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா ஊடகமும், சிஜேபி இயக்கம் மற்றும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்து முக்கியத்துவத்துடன் செய்திகளை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பல செய்தி மற்றும் வீடியோக்களை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
அல் ஜசீராவின் ஒரு வீடியோவில் "காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற 36 நாட்கள் தொடர்ச்சியான இளைஞர் போராட்டங்களுக்குப் பிறகு இந்திய கல்வி அமைச்சர் பதவி விலகியுள்ளார். நகைச்சுவை மற்றும் கேலி வடிவில் தொடங்கிய ஓர் இயக்கம், தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைகளைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டமாக மாறியது" என்று கூறப்பட்டுள்ளது.
அல் ஜசீராவின் மற்றொரு செய்தியில், "நரேந்திர மோதி தனது அரசியல் அடையாளத்தை சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கினார். இப்போது அதே தளத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அவரது அரசை எதிர்த்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இந்தியாவின் இளம் போராட்டக்காரர்கள் தங்களது அரசை நையாண்டி செய்து வருகின்றனர். அந்த நையாண்டி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தலைநகர் டெல்லியில் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சமூக ஊடகங்களில் மீம்கள், நையாண்டி வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
"இதன் மூலம், நரேந்திர மோதி தனது அரசியல் செல்வாக்கை உருவாக்கிய அதே தளத்திலேயே அவரை சவாலுக்கு உட்படுத்துகின்றனர். 'கரப்பான் பூச்சி' இயக்கத்தின் டிஜிட்டல் பிரசாரம் பெரும்பாலும் நகைச்சுவையையும் நையாண்டியையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது" என்றும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
"காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலான உள்ளடக்கங்களாக மாறின" என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
"காவல்துறையினரின் தடியடியில் இருந்து தப்பித்து ஓடும் காட்சிகளை பிரபல மொபைல் விளையாட்டான சப்வே சர்ஃபர்ஸ் பாணியில் தொகுத்து வெளியிட்டனர்" என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
"அரசுக்கு ஆதரவான தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் பாணியை நையாண்டி செய்யும் வகையில் சில போராட்டக்காரர்கள் வீடியோக்களை உருவாக்கினர். அந்த தொகுப்பாளர்கள் போராட்டக்காரர்களை 'தேசவிரோதிகள்' மற்றும் 'வெளிநாட்டு நிதியுதவி பெறும் சதியாளர்கள்' என்று சித்தரித்திருந்தனர்" என்றும் அந்த ஊடகம் கூறியுள்ளது.
மற்றொரு அரபு ஊடகமான அல் அரேபியா, "மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா அதிர்ச்சியூட்டும் ஒன்றாக இருந்தது. ஏனெனில், அழுத்தங்களுக்கு இடமளித்து முடிவெடுக்கும் தலைவராக பிரதமர் மோதி அறியப்படுவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
"தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார் என்ற தகவல் வெளியான பிறகு, போராட்டம் நடைபெற்ற பகுதியைச் சுற்றி பெரும்பாலான நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் இணைய சேவைகளை மத்திய அரசு மீண்டும் செயல்படுத்தியது" என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், "அடுத்த ஆண்டு மோதி தலைமையிலான பாஜக பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதேபோன்ற இளைஞர் இயக்கங்கள் அரசுகளை ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளன" என்றும் அல் அரேபியா சுட்டிக்காட்டியுள்ளது.
'அமித் ஷா தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவு'
ஜெர்மனியின் ஊடகமான டி.டபிள்யூ "இளைஞர் போராட்டங்களின் பின்னணியில் இந்தியாவின் கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய உள்துறை அமைச்சர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அதே நேரத்தில், காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர், இந்தியா முழுவதும் உள்ள 'காக்ரோச்சுகளுக்கு' நன்றி தெரிவித்தார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "2021ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு ஏற்பட்ட மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இந்தப் போராட்டங்கள் அமைந்துள்ளன" என்றும் டி.டபிள்யூ குறிப்பிட்டுள்ளது.
"நாடு முழுவதும் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களின் அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த சில மணி நேரங்களிலேயே, உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்" என்றும் அந்த ஊடகம் எழுதியுள்ளது.
அமித் ஷா தனது பதிவில், "பாஜக தொண்டர்களுக்கு எந்தப் பதவியையும் விட நாடு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்தான் முக்கியம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியில் இருந்து ராஜிநாமா செய்திருப்பது, அந்தக் கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்" என்று குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் மேற்கொண்ட சீர்திருத்தங்களைப் பற்றி குறிப்பிட்ட அமித் ஷா, "தேர்வு முறையை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய அவரது அர்ப்பணிப்புக்கு அவரது பதவிக்காலம் ஒரு சான்றாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு